| Article Index |
|---|
| எருக்கலம்பிட்டி முஸ்லிம்கள் வரலாறும் பாரம்பரியங்களும் |
| 2 |
| All Pages |
- அமைவிடம்
எருககலம்பிட்டிக் கிராமம் மன்னார்தீவின் வடக்கில் ஒரு குடாநாடு போன்று அமைந்துள்ளது. இதன் வடபுறம் பாக்கு நீரிணையின் ஒரு அந்தமாகவும், கிழக்குப் புறம் மன்னார்க் குடாக்கடலின் ஒரு கரையாகவும் அமைந்திருக்கின்றது. தென் புறத்தில் உள்ளாறு அமைந்திருக்கின்றது. இக்கிராமத்தின் மேற்குப் புறம் மன்னார்த்தீவின் எஞ்சிய நிலப்பரப்புடன் தொடர்புடையதாகவுள்ளது. ஏறக்குறைய 4 மைல் நீளமான கடற்கரை இக்கிராமத்தைச் சுற்றிக்கானப்படுகிறது. இக்கிராமத்தின் வடபுறத்தில் தென்னை, பனை ஆகியன செழித்து வளர்கின்றது. கிழக்குப்புறத்திலுள்ள நிலப்பரப்பில் பருத்தி, எள்ளு, குரக்கன், சாமை, வரகு, சோளம் போன்ற தானியங்கள் விளைவிக்கப்பட்டுவந்த புஞ்செய் நிலமாக இருந்து வந்திருக்கின்றது. ஒவ்வாத காலநிலையின் காரணமாக அத்தகைய விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டமையால் அப்பகுதி உடை மரங்களும், இதர முட்புதர்களும் நிறைந்த காடாக மாறியுள்ளது. சில பகுதியிலிருந்து காடுகள் அழிக்கப்பட்டுத் தென்னைச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடல் வழியாக விடத்தல்தீவு, இலுப்பக்கடவை, பலவமுனை, இரணைதீவு, நாச்சிக்குடா, ஆகிய பகுதிகளையும் கச்சத்தீவு, இந்தியாவின் கரையோரப்பட்டினங்களான இராமேஸ்வரம், கீழ்க்கரை, நாகூர், நாகபட்டணம், தொண்டி ஆகிய இடங்களையும் சென்றடையலாம். அரைவறள் வலையத்துள் இக்கிராமம் அமைந்திருப்பதால் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையும் வீசும் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறுகிறது. ஆகவே இக்கிராமத்தின் மழைவீழ்ச்சி மன்னார் மாவட்டத்தின் மழை வீழ்ச்சியான 1250mm. சராசரி வெப்பம் 27.8OC ஐயும் கொண்டுள்ளது
தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று வீச ஆரம்பிக்கும் மே மாதம் ஆரம்பத்தில் இடியுடன் கூடிய மேற்காவுகை மழையையும் இடைக்கிடையே இக்கிராமம் பெருகிறது. தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று வறண்ட காற்றாக அதிவேகத்துடன் மே மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை வீசும். இக்கிராமம் உடை மரத்துடன் கூடிய முற்பற்றைக் காட்டையும் ஆவாரை, எரிக்கலை, ஆல, இத்தி, கருக்குவாச்சி, நாவல் போன்ற மரங்களையும் தென்னை, பனை, மரமுந்திரி ஆகிய தாவரங்களையும் கொண்டுள்ளது. கடற்கரையோரங்களில் கன்னா, தாழை, உவரி போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன. மாடு, ஆடு, எருமை, குதிரை, கழுதை, மான், நரி போன்ற மிருகங்கள் இங்குள்ளன.
ஏறககுறைய ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள நிலப்பகுதியில் 10000க்கு அதிகமான மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியாக இக்கிராமம் அமைந்திருப்பதுடன், இது ஒரு தனி முஸ்லிம் கிராமமாக ஆரம்ப காலம் முதல் நிலைத்து வந்திருக்கிறது. எருக்கலம்பிட்டிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தாராக்குண்டு, புதுக்குடியிருப்பு, கரிசல் ஆகிய கிராமங்களும் முஸ்லிம் கிராமங்களாகவே இருந்து வந்திருக்கின்றன.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குப் பொதுவாகவும் இலங்கைவாழ் முஸ்லிம்கள். அனைவருக்கும் தனிப்பெரும் சொத்தாகவும் 1944ல் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியொன்று அமைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அக்கல்லூரியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியாலும் அவ்வாண்டு அக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கான மகா வித்தியாலயத்தின் அளப்பரிய சேவையாலும் எண்ணிறந்த முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் இன, மத பேதமின்றிக் கல்வி அளிக்கப்பட்டது.
அதனால் பலரும் பல்வேறுபட்ட பதவிகளில் இலங்கையில் பரவலாகச் சேவையாற்றி வருவதோடு பலர் வெளிநாடுகளிலும் சேவையாற்றி வருகின்றனர். இத்தகைய காரணங்களால் எருக்கலம்பிட்டி என்ற இக்கிராமமும் அதன் அமைவிடமும் துல்லியமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.






